Sunday, April 25, 2010

ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!

ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!

பால்பண்ணை, பால்மாடு என்றாலே... கலப்பினப் பசுக்கள்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு நம் நாட்டு பாரம்பர்ய பசு மற்றும் நாட்டு எருமை ஆகியவற்றை ஓரங்கட்டி, நமக்குள் வியாபித்துக் கிடக்கின்றன வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள்! அதற்குக் காரணம்... 'இந்த வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு, ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்!

இதுபோன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், தயிர், தேநீர் போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும், அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். இப்படிப்பட்டோரை மனதில் வைத்து... பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டுதானிருக்கிறது. அந்த மாதிரியான 'எருமை வளர்க்கும்' கிராமங்களில் ஒன்று... தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம்.

எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி இங்கே பேசுகிறார். 'நான் பெருசா ஒண்ணும் படிக்கல. அதனால எனக்கு எந்த வேலையும் கிடைக்கல. இருந்த தோட்டத்துல கொஞ்சம் விவசாயத்தைப் பாத்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செஞ்சுட்டுருந்தேன். அப்போவெல்லாம் கிராமங்கள்ல எல்லா வீட்டுலயும் பாலுக்காக எருமை மாடு வளப்பாங்க. அதனால நானும் ஒரு எருமை வாங்கலாம்னு ஆசைப்பட்டேன். 83\ம் வருஷம், கையில இருந்த காசையெல்லாம் புரட்டிப் போட்டு முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்னு வாங்கினேன். நாய்க்குட்டி மாதிரி அந்த எருமைக் கன்னு என்கூடவே அலைஞ்சு மேய்ஞ்சு வளர்ந்துச்சு. இன்னிக்கு என்கிட்ட இருக்குற எருமைகளெல்லாமே அதோட வாரிசுகள்தான்.

இப்போ மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைக, ஏழு கிடேரிக, ஒரு பொலிகாளைனு வெச்சுருக்கேன். இதில்லாம அப்பப்ப ஏகப்பட்ட எருமைகளை வித்துருக்கேன். ஒரேயரு எருமை கன்னுக்குட்டியிலதான் என்னோட வாழ்க்கை மேலே உசர ஆரம்பிச்சுது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வெச்சு வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினு இன்னிக்கு வரைக்கும் என்னோட இந்த மொத்த வாழ்க்கையுமே அந்த ஒரு எருமை ஆரம்பிச்சு வெச்சதுதான்'' என்று தன் நினைவுகளை அசை போட்டவர், எருமை வளர்ப்புப் பற்றி சொன்னவற்றை தொகுத்திருக்கிறோம் பாடமாக!

மேய்ச்சல் நிலம்... தண்ணீர் அவசியம்!

''எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால்தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்கவிட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில், பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சிவெயில் நேரங்களில், தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.

கொட்டகையெல்லாம் தேவையில்லை!

மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும். மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. இன்னும் சொல்லப் போனால், மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.

சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும், தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம்தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு, மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

பருவம் சொல்லும் பல்!

எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்துக்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் என்பதால், கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால்... அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.

எருக்கு இலை பழுப்பதேன்... எருமைக் கன்று சாவதேன்?

கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், கன்றுகள் இறந்துபோக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்துதான் கிராமங்களில் 'எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?' என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை 'பால் இல்லாமல்' என்பதாகும்.

பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லாவிடில் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது, முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.

தடுப்பூசிகள் அவசியம்!

எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால், வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக் கூடாது. சுத்தமாகக் கழுவியபின்தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக, சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடிநீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்''

ஒரு நாளைக்கு 10 லிட்டர்!

பரமாரிப்புக் குறிப்புகளைச் சொல்லி முடித்த கருப்பையா... ''கன்னு போட்டதுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த ரெண்டு மாசம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாசம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவுல இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதுக்கப்புறம் பால் வத்திடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில கொஞ்சம் கம்மியாத்தான் பால் கறக்கும். டீக்கடை, வெளியிலனு நேரடியா பால் வித்தா... லிட்டருக்கு 20 ரூபாய் கிடைக்கும். நான், வியாபாரிககிட்ட முன்பணம் வாங்கிட்டு கொடுக்கிறேன். அதனால, லிட்டருக்கு 16 ரூபாய்தான் கிடைக்குது. எருமைப்பால் கொழுப்பு அதிகமா, கெட்டியா இருக்குறதாலதான் நல்ல விலை கிடைக்குது. எவ்வளவு வருமானம் வருதோ... அதுல பாதியை மாட்டுக்குச் செலவழிக்கணும்னு சொல்வாங்க. அதாவது, அந்தளவுக்கு தவிடு, புண்ணாக்கு வாங்கிப் போடணும்'' என்றவர்,

''எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக ரொம்ப கவலைப்படத் தேவையில்ல. ஆனா, மேலே சொன்ன மாதிரி குறைந்தபட்ச விஷயங்களையெல்லாம் முறைப்படி பராமரிச்சோம்னா... எருமை மூலமாவே போதுமான லாபம் பார்க்கலாம்.

சினையான கன்னுக்குட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். என்கிட்ட இருக்கற மாடுகள்ல எட்டு மாடு இப்ப கறந்துகிட்டிருக்கு. சராசரியா ஒரு நாளைக்கு 50 லிட்டர் பால் மூலமா, மாசத்துக்குச் செலவு போக 14,000 ரூபாய் கிடைக்குது (கறவைக் கூலியாக கருப்பையா எடுத்துக் கொள்ளும் 2,000 ரூபாயும் அடக்கம்). சாணி மூலமா மாசம் 3,000 ரூபாய். ஆக மொத்தம் மாசத்துக்கு 17,000 ரூபாய் லாபமா கிடைக்குது'' என்றார் கருப்பையா மகிழ்ச்சியுடன்.

No comments:

Post a Comment